அம்மான்னா சும்மாவா?

Tuesday, May 31, 2011

அம்மா வாழ்க‌

உலகின் ஒரே தங்கதாரகையும், ஈழத்தாயும், தமிழகத்தின் நிரந்தர முதல்வரும் ஆகிய நம் அம்மா அவர்களின் ஆற்றல் திறன் உலகம் அறிந்தது. நேற்று நடந்த ஒரு நிகழ்வை பற்றி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

அம்மா அவர்கள் கோட்டையில் இருந்து தன் வீட்டிற்கு சுமார் 1:40 மணிக்கு கிளம்பியுள்ளார். வழியில் நின்று கொண்டு இருந்த பல ஆயிரம் மக்களிடையே இருந்த முன்னால் MLAவை அழைத்து அவரின் குறையை கேட்டு அறிந்தார். இது என்ன ஒரு பெரிய விஷயமா என்று நீங்கள் கேட்கலாம். ஆம் இது தாயுள்ளத்தோடு அம்மா அவர்கள் ஆற்றிய ஒரு பெரும் பணி.

மைனாரிட்டி ஆட்சியில் சீரழிந்த தமிழகத்தினை மீண்டும் நிலைநிறுத்த அம்மா அவர்கள் ஊண் உறக்கம் இன்றி 24 மணி நேரமும் அரும்பாடுபட்டு வருகின்றார். மதியம் 1:40 மணிக்குதான் வீட்டிற்கு செல்ல ஆரம்பிக்கின்றார். அதற்கு மேல்தான் அவரின் மதிய உணவு உட்கொள்ளும் நேரம். தாயே நீங்கள் இப்படி கடுமையாக உழைத்து உங்கள் உடம்பை கெடுத்துகொள்ள வேண்டாம் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பிலும், புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத்தமிழர்களின் சார்பிலும் வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்.

வழியில் நிறைந்து இருக்கும் பல ஆயிரம் மக்கள் இடையே நிற்கும் ஒருவரை உடனே அடையாளம் காணும் பெரும் ஆற்றல் அம்மாவிடம் உள்ளது. மேலும் அம்மாவை பற்றி குறை கூறுவோர் அம்மாவை உடனே பார்க்க முடியாது, மிக கஷ்டம் என்று புருடா விடுவர். அதை எல்லாம் இந்த செயல் மூலம் தவிடு பொடி ஆக்கிவிட்டார் நம் அம்மா. மைனாரிட்டி ஆட்சி புரிந்த திம்மி எப்போதாவது இந்த மாதிரி நடு வழியில் வண்டியை நிறுத்தி மக்கள் குறை கேட்டு உள்ளாரா?

தாயே நீங்கள் பொற்கால ஆட்சி நடத்தும் தமிழகத்தில் நாங்கள் அனைவரும் வசிக்கின்றோம் என்பதே எங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

Thursday, May 26, 2011

அன்னா ஹசாரே ஒழிக

பாரதத்தின் புதிய விடிவெள்ளி என்று கருதப்பட்ட அன்னா ஹசாரேவின் சுயம் வெளிபட்டுவிட்டது. உண்ணாவிரத பந்தலில் பாரத மாதாவின் படத்தை வைத்திருந்ததால் அவரை 80 கோடி ஹிந்துக்களும் ஆதரித்தனர். உலகம் எங்கும் பரவி இருக்கும் பாரத மக்கள் blog, facebook, twitter மூலம் தங்கள் தேசபக்தியினை வெளிபடுத்தினர். அவர்களின் ஆர்வத்தால் சில காலம் blog செயல்பட முடியாமல் போனது.

ரோம ராஜ்ஜியத்தினை அகற்றி ராம ராஜ்ஜியத்தினை நிறுவ அயராது பாடுபட்டு வரும் வீர சிவாஜியாகிய நம் மோடியை உலகின் ஆக சிறந்த (இரண்டாம்) முதல்வர் என்று பாராட்டினார் அன்னா ஹசாரே. அவரை பார்த்து மற்றவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேட்டி அளித்தார். அதை கண்டு தூய உள்ளம் கொண்ட 80 கோடி ஹிந்துக்களும் மனம் மகிழ்ந்தனர்.

ஆனால் இப்போது அதே அன்னா ஹசாரே குஜராத்தில் சாராயம் ஆறாக ஓடுகின்றது என்று பேட்டி கொடுக்கின்றார். குஜராத்தில் ஊழல் என்று கூப்பாடு போடுகின்றார். ஒரு குழுவில் இடம் கொடுத்ததற்காக இப்படியா ரோம ராணியின் காலில் விழுவது? வெட்கம், மகா வெட்கம். அன்னா நீங்கள் மனம் மாறியதற்கு என்ன காரணம்?

வாழ்க மோடி. வீழ்க அன்னா.

Wednesday, May 25, 2011

புலிகள் ஏஜெண்ட்டின் அறிக்கை

உலகின் ஒரே தங்க தாரகையும் ஈழத்தாயும் ஆகிய நம் அம்மாவை புலிகள் கொல்ல முயற்சி செய்ததாய் தகவல் வெளியாகி உள்ளது. அதை கண்டு 80 கோடி ஹிந்துக்களும், புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத்தமிழர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

புலிகளின் ஏஜெண்ட் ஆக செயல்பட்டு வரும் நெடுமாறன் புலிகளை ஆதரித்து உடனே அறிக்கை வெளியிடுகின்றார். புலிகள் அம்மாவை எதுவும் செய்ய மாட்டார்களாம். ஆமாம் அது இவருக்கு எப்படி தெரியும்?

புலிகளின் பின்புலமாக இருந்தது திமுகதான் என்று புலிகளின் தலைவர் சொல்லியுள்ளார். அதை நம் அம்மாவும் ஆமோதித்து உள்ளார். அதை பற்றி இந்த ஏஜெண்ட் விளக்குவாரா?

வாழ்க அம்மா. வீழ்க புலிகள்.

Monday, May 23, 2011

ஈழத்தாயை கொலை செய்ய புலிகள் முயற்சி

சி.என்.என் ஐ.பி.என் இன்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. விடுதலை புலிகள் ஈ.வெ.ராவின் கொள்கைகளை பின்பற்றியவர்கள் என்று புலிகளின் முன்னாள் தலைவர் தெரிவித்து உள்ளார்.

புலிகள் தமிழகத்தினை பாரத மண்ணில் இருந்து பிரிக்க முயற்சிக்கின்றனர் என்று பல காலமாக நம்மவர் சொல்லி வருகின்றோம். ஆனால் அதை திம்மிக்கள் கட்டுக்கதை என்று புறந்தள்ளிவிட்டனர். இப்போது அந்த உண்மை வெளிவந்து விட்டது.

மேலும் அவர் உலகின் ஒரே தங்க தாரகையும் ஈழத்தாயும் ஆகிய நம் அம்மாவை கொலை செய்ய புலிகள் முயற்சி செய்தனர் என்று ஒரு அணுகுண்டை வீசியுள்ளார். இதை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு கருணாநிதி, வீரமணி, சுப.வீரபாண்டியன், திருமாவளவன், நெடுமாறன், வை.கோ, சீமான் போன்ற புலிகளின் ஆதரவாளர்களை பொடா, தடா மற்றும் எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்து திகார் சிறையில் அடைக்க வேண்டும் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பில் வேண்டுகிறேன்.

புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத்தமிழர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளின் ஜனாதிபதிகளையும், பிரதமர்களையும் சந்தித்து அம்மாவின் பாதுகாப்பிற்காக அனைத்துலக‌ படையை அனுப்புமாறு வேண்டுவோம்.

வாழ்க அம்மா. வீழ்க புலிகள்.

Friday, May 13, 2011

நக்கீரனின் விஷமம்

உலகின் ஒரே தங்க தாரகையும் தமிழகத்தின் நிரந்தர முதல்வருமாகிய அம்மா அவர்கள் தமிழீழம் அமைய அரும்பாடுபட்டு வருவது உள்ளங்கை நெல்லிகனி. அதனால்தான் அவரை புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழ தமிழர்கள் "ஈழத்தாய்" என்று அழைக்கின்றனர்.

அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் ராஜபக்சேவுக்கு வயிறு கலங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்மா அவர்கள் கூடிய விரைவில் தமிழக தேர்தல் அதிகாரியான பிரவீண் குமார் தலைமையில் இயங்கும் துணை நிலை ராணுவத்தை அனுப்பி தமிழீழம் கிடைக்க செய்வார் என்று ஏங்கி தவிக்கும் பல கோடி தமிழர்களில் நானும் ஒருவன்.

அதை கண்டு பொருக்க முடியா நக்கீரன் ஒரு விஷம செய்தியை வெளியிட்டு உள்ளது. இது அம்மாவின் பேட்டியாம்.


இலங்கை தமிழர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆள்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதை பற்றி பல பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பல அறிக்கைகளையும் வெளியிட்டு இருக்கிறேன். இதற்கு எல்லாம் காரணம் இலங்கை அரசுதான். ஆகவே தமிழர்கள் என்ற முறையில், இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டியது, நம் அனைவருடைய கடமை. இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதற்கு நம்மால் முயன்றதை அனைவரும் செய்ய வேண்டும்.

மாநில முதல் அமைச்சர் என்ற முறையில் ஓரளவுக்குத்தான் இதில் செயல்பட முடியும். ஏனென்றால் இது சர்வதேச பிரச்சினை. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை. நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசு. மத்திய அரசு என்ன செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.

நக்கீரனின் இந்த விஷம செய்தியை கடுமையாக கண்டிப்போம்.

வாழ்க அம்மா. வீழ்க நக்கீரன்.

வாழ்க வாழ்க

உலகின் ஒரே தங்க தாரகையும் ஈழத்தாயும் ஆகிய நம் அம்மாவை மகத்தான வெற்றி பெற செய்து அதன் மூலம் பல சந்ததியினருக்கு தேவையான புண்ணிய பலனை பெற்று விட்ட தமிழக மக்களை வாயார வாழ்த்துவோம்.

வாழ்க அம்மா. வீழ்க ராஜபக்சே.

Sunday, May 08, 2011

அம்மா வாழ்க‌

உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா அவர்கள் கொடநாட்டில் இருந்து இன்று மதராஸ் திரும்புகிறார். தமிழகத்தின் நிரந்தர முதல்வராக அவர் இந்த வார இறுதியில் முடிசூட உள்ளார்.

கொடநாட்டில் அவர் ஓய்வெடுக்க போனார் என்று சில திம்மிக்கள் சுற்றி திரிகின்றன. அம்மா அவர்கள் மைனாரிட்டி ஆட்சியில் தரம் தாழ்ந்துள்ள தமிழகத்தின் நிலையை எவ்வாறு உயர்த்தலாம் என்று ஆலோசனை நடத்தி உள்ளார். அதன் பொருட்டு ஊண் உறக்கம் இன்றி கொடநாட்டில் high level strategic planning முடித்து உள்ளார். அம்மாவின் பொற்கால ஆட்சியில் தமிழகம் உலகம் போற்றும் வகையில் மின்னும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za